/indian-express-tamil/media/media_files/3XvGQsfS6uuQ2A0r9Asc.jpg)
முட்டை கோஸ் விவசாயம் தொடர்ந்து நலிவடைந்து வரும் நிலையில் கடும் விலை சரிவை சந்தித்து வருவதாகவும் விவசாயிகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.20) மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், "கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், குப்பனூர், மாதம்பட்டி, கரடிமடை, தென்கரை, தேவராயபுரம், தாழியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முட்டை கோஸ் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாற்றங்களால் இதனை உரிய நேரத்தில் பயிரிட முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 15,000 முதல் 18,000 பயிர்கள் நட்டு வரும் நிலையில் புழுக்கள், பூஞ்சன நோய், வனவிலங்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து 6 மாத காலங்களுக்கும் மேலாக முட்டை கோஸ் விலை சரிந்து வருகிறது. எனவே இந்த விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து முட்டைக் கோஸ் நேரடியாக கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
தோட்டக்கலை மூலமாக அதிக விலை சரிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய காலத்தில் ஏற்றுமதி செய்திட மாவட்ட நிர்வாக முன் வர வேண்டும்.
உழவர் சந்தைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து முட்டைக்கோஸ் வருவதை தவிர்த்து உள்ளூர் முட்டை கோஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விலையில்லாத காலகட்டங்களில் தோட்டக்கலை சார்பாக இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்".
இந்த கோரிக்கை மனுவை சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. மேலும் மனு அளிக்க வந்த விவசாயிகள் அவர்களது கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்தியும் முட்டைகோசுகளை ஏந்தியும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் முட்டைக்கோசுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.5 எனக் கூவி கூவி விற்பனை செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.