/indian-express-tamil/media/media_files/2025/06/05/R29EZWugyqN6jMXRDqHn.jpg)
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
பெங்களூரு துயரம்: பொறுமையின் அவசியம்
சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்திய ஆளுநர், "விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்" என வலியுறுத்தினார். வெற்றி கொண்டாட்டங்கள் கட்டுப்பாடின்றி போனதால் ஏற்பட்ட பத்து உயிர்களின் இழப்பு, அனைவருக்கும் பொறுமையின் அவசியத்தை உணர்த்திவிட்டதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அணி நிர்வாகமும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுவாழ்வில் கவனமான பேச்சு: கமல்ஹாசனுக்கு அறிவுரை
கமல்ஹாசன் போன்ற பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். "அரசியலுக்கு மட்டும் ஒரு பகுதி பொது வாழ்க்கை அல்ல, திரைப்படங்களில் நடிக்கும்போது கூட பொதுமனிதராகத்தான் இருக்கிறார்" எனக் குறிப்பிட்ட அவர், "சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் தமிழகம் கொந்தளிக்காதா?" என கேள்வி எழுப்பினார். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பது அவசியம் என்றும், யாருடைய மனதையும் புண்படுத்துகின்ற உரிமை பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் கிடையாது என்றும் தெரிவித்தார். கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காவிரி நீர் பிரச்சனை போன்ற ஏற்கெனவே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் விவகாரங்களின்போது, மேலும் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தும் கருத்துக்களைத் தவிர்ப்பது அவசியம் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசியல் களமும், புதிய கல்விக் கொள்கையும்
"தமிழகத்தில் எந்த ஷா வந்தாலும் காலூன்ற முடியாது" என்ற முதலமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த ஆளுநர், அது அரசியல் பேச்சு என்றும், ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாய்ப்புகள் மாற்றி மாற்றி தரப்படும் என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார். கன்னட நடிகர்கள் யாரும் மொழி குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், கமல்ஹாசன் பேசியது குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டினார். கொந்தளிப்பை ஏற்படுத்தும் விஷயங்களைப் பேசக் கூடாது என்பதே தங்கள் கருத்து என்று தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசிய ஆளுநர், அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு மாநில மொழியையும் மதிக்க வேண்டும் என்றும், அதேசமயம் மற்றவர்களின் தாய் மொழியைப் பழிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்றும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் 10 ஆண்டுகளுக்கும் மேல் மத்தியில் ஆட்சியில் இருந்தவர் எனக் குறிப்பிட்ட அவர், அப்பொழுதெல்லாம் தமிழுக்கு என்ன செய்தார், இப்போது தமிழுக்கு எதிராக யார் என்ன செய்தார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
கல்வித் தரம் உயர்வு: தமிழர்களின் எதிர்காலம்
தமிழகத்தில் கல்வித் தரம் உயர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை எனக் கூறிய ஆளுநர், கல்வி பரவலாக்கப்பட்டிருந்தாலும் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். தமிழர்கள் இன்னும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளைக் கண்டு பயப்படக்கூடாது என்றும், எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு கல்வித் தரம் உயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். யு.பி.எஸ்.சி தேர்வுகள் தமிழர்களின் எதிர்காலத்திற்கும், தமிழகத்தின் அங்கீகாரத்திற்கும் உதவும் என்றும், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். தேர்வுகளைக் கண்டு பயப்படும் மாணவர்களை உருவாக்காமல், தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.