கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா பருவமழை காரணமாக வரும் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தற்போது பருவமழையால் காய்ச்சல் வருகிறது. அதே சமயம் கோவை அரசு மருத்துவமனையில் அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வருவதாக கூற முடியாது. எப்போதும் வருவதை விட ஒன்று இரண்டு சதவிகிதம் அதிகமாக வரலாம். இந்த பருவ காலத்தில் காய்ச்சல் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதனை கருத்தில் கொண்டு தனி வார்டு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், பாக்டீரியா, வைரஸ் உட்பட பிற காரணங்களாலும் காய்ச்சல் வரலாம், முதலில் அது எந்த வகை காய்ச்சல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக காய்ச்சல் என்று வந்தால் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிட வேண்டும். எதிர்ப்பு சக்தியால் வரும் காய்ச்சல் என்றால் பயப்படத் தேவையில்லை. கிருமிகளால் காய்ச்சல் ஏதேனும் வந்தால் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, "காய்ச்சல் வந்தால் கஞ்சி, இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். முக கவசங்கள் அணிந்து கொள்வதும் நல்லது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கோவை அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சலை பொறுத்தவரை சாதாரணமாக 60 பேர் புற நோயாளிகளாக வருகின்றனர். அவர்களை கண்காணிக்க மருத்துவர்களும் உள்ளனர் தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவர்களை போடலாம்" என்றார்.
மக்கள் மழை நீர் தேங்காமல் இருக்க அரசு அறிவுறுத்தியதை மேற்கொள்ள வேண்டும். கொசுக்களில் இருந்து பாதுகாத்து கொள்ள கொசு வலைகளை பயன்படுத்தலாம். மேலும் மக்கள் எப்போதும் நீரை கொதிக்க வைத்து பருகுங்கள். மழையில் அதிகமாக வெளியில் செல்வதை தவிருங்கள் எனவும் மருத்துவர் அறிவுறுத்தினார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“