கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் மகளிர் விடுதி வைத்து நடத்தி வந்தவர் ஜெகந்நாதன். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த புனிதா மற்றும் ஜெகந்நாதனும் இணைந்து அங்கு தங்கியிருந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறிய புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை நடைபெற்று வந்ததையடுத்து ஜெகந்நாதனும் புனிதாவும் தலைமறைவாகினர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று ஆலங்குளம் என்ற பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து ஜெகந்ந்தான் சடலமாக மீட்கப்பட்டார். ஜெகந்நாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.