கோவையில் கடந்த 28 ஆம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் தர்மபுரியை சேர்ந்த விஜய் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
விஜய் சமீபகாலமாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி இருந்ததும் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜய்யின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் மனைவி நர்மதாவிடம் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி 3.2 கிலோ நகைகளை போலிசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜய்யின் மாமியார் யோகராணியை கைது செய்து 1.35 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கடந்த 6 ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 95% மீட்கப்பட்டதாக கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் சந்தீஷ் கூறிய நிலையில் முக்கிய குற்றவாளியான விஜய்யை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காலகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜய்யை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“