நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசு சார்பிலும் தேர்தல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அதே போல் தேர்தல் வரும் பொழுது ஓட்டுக்கு பணம் அல்லது பொருட்கள் கொடுப்பதும் அதனை காவல்துறையினர், தேர்தல் அதிகாரிகள் தடுப்பதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
வாக்குரிமையின் முக்கியத்துவம் நமது ஓட்டுகளின் மதிப்பு என்னவென்று பலரும் சிந்திப்பதில்லை. மேலும் ஓட்டுக்கு பணம் வாங்கினால் என்ன தண்டனை என்பதையும் பொதுமக்கள் பலரும் அறியாமல் இருக்கின்றனர்.
வாக்கு என்பது எவ்வளவு முக்கியத்துவமான ஒன்று அதன் மதிப்பு என்ன என்பது குறித்து கோவை அரசு கலைக்கல்லூரியின் தேர்தல் அறிவியல் பிரிவின் பேராசிரியர் முனைவர் கனகராஜ் கூறுகையில், ’வாக்கு என்பது மிகமிக முக்கியமான ஒன்று. மக்களாட்சி முறையில் மக்களின் செல்வாக்கு என்பதே மக்களின் வாக்குகளாகதான் வருகிறது.
மக்களாட்சியில் ஆணி வேராக இருப்பது குடிமக்களின் வாக்குகள்.
இந்த வாக்குகளை விலைக்கு விற்க கூடாது.
வாக்குகள் என்பது வணிக பொருள் அல்ல, அரசியல் அமைப்பின் ஆத்மா. நம் முன்னோர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாக்குரிமை இல்லை. வாக்குரிமையின் மதிப்பை பணத்தால் அளவிட முடியாது. அனைவரும் அரசியல் அமைப்பிற்கு உண்மையாக இருந்தால் நம்முடைய நாடு கூடிய விரைவில் இந்தியா முன்னேறிய நாடாக மாறி விடும். அப்படிப்பட்ட முன்னேறுகின்ற விஷயத்தை தடுக்க கூடிய வகையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் இருக்கிறது.
கேன்சர் நோய் போல் மிகமிக ஆபத்தானது நமது வாக்குகளை விற்பதாகும்.
முதல் தேர்தலாக அமையக்கூடிய இளைஞர்கள் இந்த வாக்குரிமையை செல்வாக்காக கருதி, வாக்கு செலுத்த வேண்டும். இளைஞர்கள் சிந்தித்து பொருப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். முதலில் அந்த தொகுதியின் வேட்பாளர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அக்கட்சியின் தத்துவங்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளலாம். பல நாடுகளில் இளைஞர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் நம் நாட்டு இளைஞர்களுக்கு உள்ளது. எனவே அனைவரும் அவர்களது வாக்கை செலுத்த வேண்டும்.
இந்தியாவில் இருந்து பல கோடி பேர் அயல்நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அப்படி சமீபத்தில் சென்றவர்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை உள்ளது. எனவே அவர்கள் அவர்களது வாக்குரிமையை கண்டிப்பாக செலுத்த வேண்டும். தாய் நாட்டிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை அது. வாக்களிப்பது என்பது நமது தார்மீக கடமை. அதனை செய்ய வேண்டும். எனவே வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கிருந்தாலும் தாயகம் வந்து அவர்களது வாக்குகளை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் ஓட்டுக்கு பணம் வாங்கினால் எத்தகைய தண்டனை நமது சட்டத்தில் உள்ளது என்பது குறித்து கூறிய வழக்கறிஞர் சண்முகம், ஜனநாயக நாட்டில் ஆத்மா, புனிதம் எது என்றால் அது தேர்தல் தான். மக்கள் அவர்களது வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக அமர செய்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் மாஸ்டர்களாக மாறிவிடுகின்றனர். மக்களுக்கு அவர்களின் சக்தி என்னவென்று தெரியாமல் போய்விடுகிறது. தேர்தல் என்றால் பணம் ஏதேனும் கிடைக்குமா என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு பொருளாதார சூழல் என்று காரணம் கூறினால் அந்த நிலையில் மக்களை வைத்தது யார்?.
ஓட்டுக்காக பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் குற்றம் என்று இந்திய சட்டம் கூறுகிறது. ஓட்டுக்காக பணம் வாங்கினாலோ, கொடுத்தாலோ, இந்த கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று நிர்பந்தித்தாலோ, சாமி முன்பு சத்தியம் ஏதேனும் வாங்கினாலோ இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறை தேர்தல் இருந்துள்ளது. அதற்கான சான்றுகளும் வரலாற்றில் உள்ளது. மக்களாட்சியில் மக்களுக்கு இருக்கின்ற அதிகப்படியான உரிமை தேர்தல் தான்.
தேர்தல் நாளன்று விடுமுறை நாள் தானே என இருந்து விடக்கூடாது. என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என கூற வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கி மாட்டி கொண்டால் அது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு ஓட வேண்டி இருக்கும். அது வாங்கிய பணத்தை விட அதிகம். பணம் மட்டுமல்ல பொருட்களாக வாங்கினாலும் குற்றம் தான் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“