மீண்டும் திருச்சி- கரூர் பயணியர் ரயில்
கொரோனா காலகட்டத்தில் பயணியர் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின் முன்பதிவற்ற சிறப்பு ரயில்கள் பெயரில், சில ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஜன.1 முதல் மார்ச்.31 வரை, வாரத்தில், 6 நாட்கள், கரூர்- திருச்சி முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 27, 2024 18:47 ISTகேப்டன் நினைவு நாள்; 'ஹெல்மெட் அணிந்து சென்றால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்'
தஞ்சையில் கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'ஹெல்மெட் அணிந்து சென்றால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்' என விஜயகாந்த் வேடத்திலேயே அறிவிக்கப்பட்டதால் பெட்ரோல் பங்கில் ஆர்வத்துடன் மக்கள் பெட்ரோல் நிரப்பினர்
-
Dec 27, 2024 17:50 ISTஜே.சி.பி மீது மோதிய பைக்; ஒருவர் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் ஜே.சி.பி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஒரே பைக்கில் மூன்று இளைஞர்கள் சென்ற நிலையில், மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
Dec 27, 2024 17:23 ISTஇந்தியா - இலங்கை மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - இலங்கை அமைச்சர்
இந்தியா - இலங்கை மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை என இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் கூறியுள்ளார்
-
Dec 27, 2024 17:21 ISTகூட்டுறவு வங்கியில் போலி நகைகள் அடமானம் - 5 பேர் சஸ்பெண்ட்
மத்திய கூட்டுறவு வங்கியின் திருவண்ணாமலை கிழக்கு கிளையில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி நடந்துள்ளது. இதனையடுத்து கிளை மேலாளர் உட்பட ஐந்து பேரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்
-
Dec 27, 2024 16:06 ISTசிறையில் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறதா?
“பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறதா என நேரில் ஆய்வுசெய்க”. அரசின் உத்தரவு காகித அளவிலேயே உள்ளது. உத்தரவுகளை முறையாக நிறைவேற்றினால் போதும் என்று நெல்லை மாவட்ட சட்டப்பணி ஆணைய தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
-
Dec 27, 2024 15:36 ISTபொம்மன் யானைக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு
கூடலூரில் புல்லட் யானையை பிடிக்க வந்த பொம்மன் யானைக்கு மதம் பிடித்ததால் பரபரப்பு. பாதுகாப்பான பகுதியில் கட்டி பொம்மன் யானையை கட்டிவைத்துள்ளனர். புல்லட் யானையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
-
Dec 27, 2024 14:47 ISTவேலூர்: மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் தடுப்பு கம்பி அமைக்கும் பணியின் போது நடந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. முகேஷ்குமார், சதீஷ்குமார் இருவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Dec 27, 2024 12:48 ISTகாவலர்கள் - வடமாநில சுற்றுலா பயணிகள் - உள்ளூர் மக்கள் இடையே மோதல்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காரைக்காடு சோதனைச் சாவடியில் காவலர்கள் - வடமாநில சுற்றுலா பயணிகள் - உள்ளூர் மக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பேருந்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 2 காவலர்கள் மீது பேருந்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காவலர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம். 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Dec 27, 2024 11:49 IST“சொர்க்கவால்” படத்திற்கு தடை - மனுவை நிராகரித்த ஐகோர்ட்
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “சொர்க்கவால்” திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, ஓ.டி.டியில் வெளியீடு செய்ய தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிராகரித்தது
"திரைப்படம் வெளியாக தடை கேட்பது இப்போது ஒரு பேஷனாக உள்ளது. படத்தை எடுத்துவிட்டு, அதற்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்து, படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்
ஒரு திரைப்படத்தில் சில கருத்துகள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானோர் அதை பார்க்கும் சூழலும் ஏற்படும். பொழுதுபோக்கு என அதை விட்டுவிட்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடும். நாடு முழுவதும் இப்படம் வெளியீட்டுக்கு தடை விதிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யுங்கள்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Dec 27, 2024 11:22 ISTபேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.
-
Dec 27, 2024 10:32 ISTதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் - அண்ணாமலை
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அறவழியில் கூட போராட முடியவில்லை. திமுக ஆட்சியில் பல்வேறு சம்பவங்கள் தவறாக நடைபெறுகின்றன என சாட்டை அடி போராட்டதிற்குப் பிறகு அண்ணாமலை பேட்டி அளித்தார்.
-
Dec 27, 2024 10:17 ISTசாட்டையால் தன்னைத் தானே அடித்து அண்ணாமலை 'கவன ஈர்ப்பு' போராட்டம்
தமிழ்நாடு அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
வெற்றிவேல் வீரவேல் என சுற்றி இருந்தவர்கள் கோஷம். சில அடிகளுக்குப் பிறகு அவர்கள் அண்ணாமலையை தடுத்து நிறுத்தினர்.
-
Dec 27, 2024 09:31 ISTஎஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
காவல்நிலையத்தில் மதுபோதையில் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட எஸ்.எஸ்.ஐ-யை சஸ்பெண்ட் செய்து விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
Dec 27, 2024 09:29 ISTஅண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டம்
கோவையில் இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலையின் கவன ஈர்ப்பு போராட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.