Coimbatore, Madurai, Trichy News Updates: ஒவ்வொரு வாரமும் போராட்டம் நடத்துவீர்களா? - நா.த.க-வுக்கு ஐகோர்ட் கேள்வி

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seeman Madurai HC

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோ கிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  • Jul 07, 2025 20:05 IST

    பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கலாம், நாங்கள் வைக்கக் கூடாதா?- இ.பி.எஸ் கேள்வி

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அ.தி.மு.க தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கலாம், நாங்கள் வைக்கக் கூடாதா? 1999-ல் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டு காங்கிரஸ் அரசில் இருந்தபோது தி.மு.க எதையும் செய்யவில்லை; கொள்ளை அடிப்பதே தி.மு.க-வின் நோக்கம்” என்று கூறினார்.



  • Jul 07, 2025 20:02 IST

    ரிதன்யா வழக்கில் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

    திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களை திருப்பூர் முதன்மை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட கவின் குமார் மற்றும் அவரது பெற்றோரான ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி தம்பதிக்கு ஜாமீன் வழங்கக்கோரி ரிதன்யா தரப்பிலேயே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 



  • Advertisment
  • Jul 07, 2025 19:34 IST

    தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் - இ.பி.எஸ்

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அ.தி.மு.க தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “எங்கள் கூட்டணி வலிமையான கூட்டணி; தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்” என்று கூறினார். 



  • Jul 07, 2025 19:32 IST

    ஒவ்வொரு வாரமும் போராட்டம் நடத்துவீர்களா? - நா.த.க-வுக்கு ஐகோர்ட் கேள்வி 

    போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நா.த.க சார்பில் போராட்டம் நடத்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. "கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை மறைத்து, காலையில் அனுமதி கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்தது ஏன்? இது போன்று  முறையீடு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் கூறியது. நாளை சீமான் தலைமையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Jul 07, 2025 18:44 IST

    மேட்டுப்பாளையம் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் - இ.பி.எஸ்

    கோவை மேட்டுப்பாளையத்தில் நடக்கும் அ.தி.மு.க தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மேட்டுப்பாளையம் கூட்டத்தைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம்; வரும் தேர்தலில் தீயசக்தியான தி.மு.க-வின் ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.



  • Jul 07, 2025 17:50 IST

    ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது ஐகோர்ட் கிளை கேள்வி

    தொடர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளின் ஜாமினை ரத்து செய்ய போலீஸ் மனு தாக்கல் செய்யாதது ஏன்? என பல்வேறு ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2024 ஜனவரி முதல் ஜூன் வரை 2,331 ஜாமின்களை ரத்து செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுக்கள் மீதான விசாரணையில் 355 ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது; 790 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,181 மனுக்கள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தன் மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மதுரையை சேந்த சபரி காந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



  • Jul 07, 2025 17:35 IST

    கோவையில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ தொடக்கம்

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், கோவை மேட்டுப்பாளையத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவங்கினார். பிரச்சார பயணத்திற்கான பிரத்யேக பேருந்தில் எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் உடன் பங்கேற்றுள்ளார்.



  • Jul 07, 2025 17:27 IST

    சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்

    சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேரானது கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு துவங்கி முதல் அக்ரஹாரம், தேர் வீதி, இரண்டாம் அக்ரஹாரம், பட்டை கோவில், சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, பஜார் வீதி வழியாகச் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.



  • Jul 07, 2025 16:48 IST

    கோவை: எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

    கோவையில், தனியார் விடுதியில் தங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.



  • Jul 07, 2025 16:45 IST

    திருவாரூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி ட்ரோன்கள் பறக்க தடை

    திருவாரூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி, ஜூலை 9, 10-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.



  • Jul 07, 2025 16:17 IST

    மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ம் தேதி நாள் முழுவதும் நடை அடைப்பு

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வருகிற 14-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேக விழாவிற்கு எழுந்தருள இருப்பதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 14-ந்தேதி நாள் முழுவதும் நடை அடைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் கோவிலில் இருந்து வருகிற 13-ந்தேதி மாலையிலேயே கிளம்பி விடுகிறார்கள்.



  • Jul 07, 2025 16:06 IST

    அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு

    தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.



  • Jul 07, 2025 16:04 IST

    காசிமேடு மீனவர்களின் விசைபடகு சேதம்: காரைக்கால் மீனவர்கள் மீது புகார்

    ஆழ்கடலில் காசிமேடு மீனவர்களின் விசைபடகு மீது காரைக்கால் மீனவர்கள் படகை மோதச் செய்ததாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு மீனவர்களின் படகை உடைத்து பொருளை சேதப்படுத்தி தாக்கியதாகவும் காரைக்கால் மீனவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேடு சுரேஷ் தனக்கு சொந்தமான விசைப்படகில் 6 பேருடன் அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு சென்றுள்ளார்.



  • Jul 07, 2025 14:47 IST

    திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு இதுவரை 5 லட்சம் பேர் வருகை - அமைச்சர் சேகர்பாபு

    திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு இதுவரை 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், பலர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோயில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் தகவல் அளித்துள்ளார்.



  • Jul 07, 2025 14:28 IST

    கோவையில் இ.பி.எஸ் நிகழ்ச்சி - கூட்டத்தை பயன்படுத்தி ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக புகார்

    கோவையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில், கூட்டத்தை பயன்படுத்தி சுமார் ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் உள்ளிட்ட மூன்று பேரிடமிருந்து பணம் திருடப்பட்டதாக தங்கராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.



  • Jul 07, 2025 13:33 IST

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதையடுத்து, தற்போது திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



  • Jul 07, 2025 12:42 IST

    இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் கிளையில் புதிய மனு தாக்கல்

    இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணக்கு வரும்போது தற்போதையை புதிய மனுவையும் நாளை விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



  • Jul 07, 2025 12:33 IST

    அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

    எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு வந்திருந்த அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது. பேன்ட் பையை பிளேடால் கிழித்து கைவரிசை காட்டிய மர்மநபருக்கு மேட்டுப்பாளையம் போலீசார் வலைவீசி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் | இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.



  • Jul 07, 2025 11:47 IST

    மாற்று கட்சிகளை நாடும் பாமகவினர்

    கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பாமகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் அடைந்தனர். பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அரசியல் எதிர்காலம் கருதி அதிமுகவில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Jul 07, 2025 11:10 IST

    தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று காலை குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பி செல்லும் வகையில் திருச்செந்தூரிலிருந்து நெல்லை செல்லும் சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வெயிலில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் நிழற்குடைகளும், தண்ணீர் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.



  • Jul 07, 2025 10:39 IST

    அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்

    "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உங்கள் மன குளிரும் வகையில் செயல்படுத்தப்படும்" என இபிஎஸ் கூறினார். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். 



  • Jul 07, 2025 10:38 IST

    தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பழனிசாமி

    2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை கோவையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். Zபிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி வழிபாடு செய்தார்.



  • Jul 07, 2025 10:10 IST

    சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி 

    2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய இபிஎஸ் பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெறும். இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.



  • Jul 07, 2025 10:08 IST

    ராஜநாகத்தை பிடித்த வனத்துறை பெண் ஊழியர்

    திருவனந்தபுரம் பகுதியில் பெரிய ராஜநாகம் முதன்முதலாக சிக்கியிருப்பது இதுவே முதன்முறை18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவமகாக வனத்துறை பெண் ஊழியர் பிடித்தார்.



  • Jul 07, 2025 08:08 IST

    5 மாவட்டங்களில் மழை - வானிலை மையம்

    கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, குமரியில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Jul 07, 2025 07:51 IST

    இனிதே தொடங்கிய திருச்செந்தூர் குடமுழுக்கு - ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு 

    திருச்செந்தூர் குடமுழுக்கு விழா இன்று தொடங்கிய நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்ட‌து. திருச்செந்தூர் கடற்கரை, கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்

     



  • Jul 07, 2025 07:41 IST

    எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் 

    2026 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் இபிஎஸ் பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.



  • Jul 07, 2025 07:15 IST

    இனிதே தொடங்கிய திருச்செந்தூர் குடமுழுக்கு 

    அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் கோயிலில் இன்று காலை 6.15 முதல் 6.50 க்குள் புனித நீர் ஊற்றி கோயில் நடைபெற்றது. திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. "கந்தனுக்கு அரோகரா...முருகனுக்கு அரோகரா" எனக் கோஷமிட்டு பக்தர்கள் பக்திப் பரவசமடைந்தார்கள். 

    இந்த குடமுழுக்கு விழாவை காண திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே வந்து குவியத் தொடங்கினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், நகர்ப்பகுதியில் என ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.



Live News Madurai Coimbatore Trichy Tiruchendur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: