பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ101.23-க்கும், டீசல் விலை ரூ92.81-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Dec 22, 2024 21:36 ISTநெல்லையில் மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி திங்கள்கிழமையும் தொடரும் - மாவட்ட நிர்வாகம்
நெல்லையில் மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி திங்கள்கிழமையும் (டிசம்பர் 23) தொடரும்; மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட 6 இடங்களில் 4 இடங்களில் மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன. மருத்துவக் கழிவுகள் இதுவரை 18 லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Dec 22, 2024 20:33 ISTசுங்கச் சவாடி கட்டணம் உயர்வு : கடலூர் - சிதம்பரம் தனியார் பேருந்துகள் டிச. 23-ல் இயங்காது
சுங்கச் சவாடியில் 50 பேருந்து சென்று வர ரூ. 14,090 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடலூர் - சிதம்பரம் தனியார் பேருந்துகள் டிசம்பர் 23-ம் தேதி இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
-
Dec 22, 2024 19:12 ISTநெல்லையில் கொட்டப்பட்ட கேரள குப்பைகள் 4 இடங்களில் அகற்றம்
நெல்லையில் கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 4 இடங்களில் கழிவுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அந்த கழிவுகளை பலத்த பாதுகாப்புடன் குப்பைகளை கேரள எல்லை வரை கொண்டு செல்ல தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
-
Dec 22, 2024 16:10 ISTதிடீர் சுற்றுலாத் தலமான கண்மாய்
காரைக்குடி அருகே சாயக் கண்மாய் திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. கண்மாயிலிருந்து அருவி போல வெளியேறும் மறுகால் நீரில் குடும்பம் குடும்பமாக உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்
-
Dec 22, 2024 15:11 ISTஸ்டாலினுக்கு திருக்குறள் எழுதி அனுப்பிய மாணவர்கள்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, பனை ஓலையில் 1330 திருக்குறள்களை எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் தொட்டியபட்டி அரசு பள்ளி மாணவர்கள் அனுப்பினர்கள். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Dec 22, 2024 14:50 ISTவரும் 27-ம் தேதி சமயபுரத்தில் இருந்து 500 கிலோ தங்கம் மும்பைக்கு பயணம் - அமைச்சர் சேகர்பாபு
இதுவரை 23 கோயில்களில் தங்கங்கள் அரக்குகளை நீக்கி, நீதிபதிகள் முன்னிலையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 13 கோயில் தங்கங்கள் உருக்கு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 10 கோயில்களில் உருக்கப்பட்ட தங்கங்கள் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
-
Dec 22, 2024 13:48 ISTபாலாற்றில் பொங்கி வழியும் நுரை
திருப்பத்தூர் அருகே பாலாற்றில் திறந்து விடப்பட்ட தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆற்றில் நுரை பொங்கி வழிகிறது
-
Dec 22, 2024 13:26 ISTஇ.பி.எஸ் வேறு உலகத்தில் வாழ்கிறார் – டி.டி.வி தினகரன்
ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்வதாலேயே, அவரைப் போலவே தன்னை நினைத்து இ.பி.எஸ் வேறு உலகத்தில் வாழ்கிறார் என திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேட்டி அளித்துள்ளார்
-
Dec 22, 2024 12:46 ISTவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
தூத்துக்குடி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
-
Dec 22, 2024 12:26 ISTகார் உற்பத்தி ஆலைக்கு அனுமதி கோரி விண்ணப்பம்
ராணிப்பேட்டை, பணப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் டாடா நிறுவனம் அமைக்கும் கார் உற்பத்தி ஆலைக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலைக்கான அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி கோரி அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
-
Dec 22, 2024 11:57 IST"பா.ஜ.க-விற்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?": சீமான் கேள்வி
பா.ஜ.க-விற்கும், சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, இஸ்லாமியர்களை எதிர்ப்பதை விட அவர்கள் வேறு என்ன செய்திருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
Dec 22, 2024 11:51 ISTமதுரையில் நாளை மின்தடை
மதுரை பழங்காநத்தம் துணை மின்நிலைய உயரழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள்ளுவர் நகர், ஆர்.சி. தெரு, டி.பி.கே.ரோடு, சரவணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வரை, யோகியார் நகர் பகுதி, தண்டல்காரன்பட்டி ஒருபகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
-
Dec 22, 2024 11:29 ISTபொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், சின்னக்கற்பூரம்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Dec 22, 2024 10:47 ISTமருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் 30 பேர் கொண்ட கேரள குழு நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 22, 2024 10:38 ISTஇளைஞரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூ. 30 லட்சம் வழிப்பறி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இளைஞரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூ. 30 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன் என்ற இளைஞரிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Dec 22, 2024 10:02 ISTவிபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு
சென்னை, பள்ளிக்கரணையில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்கள், சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐ.டி பொறியாளர்களான விஷ்ணு மற்றும் கோகுல் இருவரும் பார்ட்டியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது.
-
Dec 22, 2024 09:36 ISTஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை
புதுக்கோட்டையில், பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண், ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனை அழைத்துச் சென்ற மருத்துவ உதவியாளர் ரங்கராஜன், ஓட்டுநர் கண்ணன் ஆகியோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
-
Dec 22, 2024 09:04 ISTமருத்துவக் கழிவுகளை கேரளாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த விவகாரத்தில் நெல்லையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரி உரிமையாளர், கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.