நாட்டிலேயே புதிய முயற்சியாக விவசாய வேளாண் பொருட்களை ஏற்றி செல்ல ப்ளுடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட மொபைல் செயலியின் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை உருவாக்கி கோவையை சேர்ந்தவர் அசத்தியுள்ளார்.
தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னணி நகரமாக கோவை உள்ளது. தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் கோவையில் பரதன் என்பவர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளிலும் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜுன் 14) அறிமுகப்படுத்தினார்.
வாகனத்தை உருவாக்கிய பரதன் கூறுகையில், சக்தி வாய்ந்த 10 KWH பேட்டரி, ஒரு சார்ஜில் 525 கி.மீ தூரம் வரை செல்ல கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளேன். மேலும் தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறையில் ஆராய்ச்சி மற்றும் துறை சார்ந்த மேம்பாடுகளை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றார். ப்ளுடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பரதன் இந்த வாகனத்தை பசியால் வாடும் நபர்களுக்கு தினந்தோறும் நேரடியாக சென்று இலவசமாக உணவை வழங்கி பசியை போக்கி வரும் சமூக ஆர்வலர் ஒருவருக்கு இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“