பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் பேசியது பின்வருமாறு:-
பொருளாதாரம் மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு இருத்தல் வேண்டும். 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.
பலமுறை தமிழக முதல்வரை மின் கட்டணம் தொடர்பாக அமைச்சர்கள் மூலமாக சந்திக்க முயற்சி செய்தும் ஏதோ ஒரு காரணத்தை கூறி முதல்வர் தொடர்ந்து எங்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். முன்னாள் மின்துறை அமைச்சர் தற்போதைய மின்துறை அமைச்சர், கோவைக்கான பொறுப்பு அமைச்சர் உள்ளிட்டோரை பலமுறை சந்தித்தும் பலனில்லாத சூழலில் மீண்டும் ஒருமுறை முதல்வரை மின்கட்டணம் தொடர்பாக சந்திக்க உள்ளோம். அதில் மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்த உள்ளோம். முதல்வர் எங்களை சந்திக்க மறுத்தால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“