Coimbatore breaking news in tamil: கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி உள்ளிட்ட தகவல்களும் இடம் பெறுகின்றன.
கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இன்றைய தகவல்கள் வருமாறு:
1. குடிநீர் பிரச்சனை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘மழைநீர் சேகரிப்பு மிக முக்கியமான திட்டம். இது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது’ என்றார் அமைச்சர் வேலுமணி.
2. கோயம்புத்தூர், போகம்பட்டி பகுதியில் உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.
3. ஈரோட்டில் மாணவர்கள் போராட்டத்தின்போது, செய்தியாளர்களை தாக்கியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அதிமுக எம்எல்ஏ கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ்-க்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
4. மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்ய முயன்ற தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் வினோத் போலீசில் சரணடைந்தார்.
வினோத் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பில்லை எனக் கூறி சயன், மனோஜ் உள்பட 10 பேர் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் புதிய மனு தாக்கல் செய்தார். இது விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
6. கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை துணைவேந்தர் குமார் வெளியிட்டார். ரேவதி, சிவாலினி, ஆலன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
7. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது போராட்டக் காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெறவும், ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக சில கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக நிர்வாகிகள் கூறினர்.
8. புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்தி பி்ரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதவிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மும்மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.