/tamil-ie/media/media_files/uploads/2023/06/fe-1200x800-rain4.jpg)
TN rains
தமிழகத்தில் இன்று (ஜூலை 3) காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டலசுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைகாற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(ஜூலை 3) தமிழகம், புதுச்சேரியில்பெரும்பாலான இடங்களிலும், வரும் 4, 5, 6-ம் தேதிகளில் சில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல, இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 - 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.