கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சை பெற வந்த வடமாநில தொழிலாளி, அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர். கோவையில் தங்கி பணியாற்றி வரும் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாக வந்துள்ளார்.
அவருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால், அவரை தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். அப்போது, ராம் சுந்தரின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு திடீரென சத்தம் போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து, தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் குறித்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, "மருத்துவமனைக்கு வந்தது முதல் அவர் மூர்க்கமாக நடந்து கொண்டார். அவரது செயல்பாடுகளில் ரேபிஸ் அறிகுறி தென்பட்டது. அவரைக் கட்டுப்படுத்தும் விதமாக தனியாக வைத்து சிகிச்சை அளித்தோம்.
எனினும், திடீரென கண்ணாடியை உடைத்து அவர் மூர்க்கமாக நடந்து கொண்டார். இதனால் அவரை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு துறைஹினர் வந்த போதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. ரேபிஸ் அறிகுறியை இரத்த பரிசோதனையில் அறிய முடியாது. இன்று (மார்ச் 12) அல்லது நாளை (மார்ச் 13) உடற்கூராய்வு நடத்தப்படலாம்" என்று தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
செய்தி - பி.ரஹ்மான்