/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project19.jpg)
Coimbatore
நடுத்தர, ஏழை குடும்பத்தினர் முதலீட்டில் முக்கியத்துவமானது தங்கம். நடுத்தர ஏழைகள் தங்கள் அவசர பொருளாதார தேவைக்காக முதலில் அடகு வைப்பது தங்கத்தையே. அடகு வைப்பார்கள் அல்லது விற்று செலவு செய்வார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பழைய நகைகள் கடைகளுக்கு விற்பனைக்காக வருவது அதிகரித்திருக்கின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் உயர் கல்வி படிப்பதற்காக மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நன்கொடை, கல்லூரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நடுத்தர ஏழை வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள நகைகளை விற்று வருகின்றனர். அடகு வைத்தால் வட்டி உள்ளிட்ட நிதி நெருக்கடியில் தள்ளப்படும் நிலையில் நகைகளை விற்று பணத்தை பெறுகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிகளில் சேர்க்கை நடந்து வரும் நிலையில் தங்க நகை கடைகளில் பெற்றோர்கள் பழைய நகைகளை விற்பது அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ அளவிலான பழைய தங்க நகைகள் விற்கப்பட்டதாக நகை கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதன் மதிப்பு 5-6 கோடி ருபாய் வரை இருக்கும் என்று தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
வழக்கமாக மே மாதங்களில் கல்லூரி சேர்க்கையில் ஈடுபடும் பெற்றோர் தங்க நகைகளை விற்பதன் மூலம் பணத்தை பெற்று தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதன் அடிப்படையிலேயே இந்த வருடமும் தங்க நகைகளை விற்று பணத்தைப் பெற்று நடுத்தர ஏழை வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்தி வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.