/indian-express-tamil/media/media_files/2025/06/16/fFFWFVAJMhiBC7GY14ai.jpg)
கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதில் குறிப்பாக கடந்த சில மாதங்களில் நடைபெற்ற "Storming Operation"களில் கல்லூரி மாணவர்ள் இடையே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற கஞ்சா வேட்டையும், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட குற்றவாளிகளை கண்டறியும் பொருட்டும், சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் செயல்களை கண்டறியும் பொருட்டும் தாபாக்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல "Storming Operation"கள் அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் "Operation - Drug Free கோவை" என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில், தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடந்த நாட்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 நபர்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பட்டியல் ஒன்றும் தயார் செய்யப்பட்டது. இந்த பட்டியலானது தரவுகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, இந்த அதிரடி வேட்டை கோவை மாவட்டத்தில் 89 தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
துணை காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் தேவையான வழிமுறைகள் ( SOP ) வழங்கப்பட்டது. முக்கியமாக 761 நபர்கள் தேடுதல் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 461 நபர்கள் நேரடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். 289 நபர்கள் தற்போது மாவட்டத்தில் இல்லாதவர்கள் என உறுதி செய்யப்பட்டது. 11 நபர்கள் இறந்து விட்டதாக தகவல் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக அவர்களின் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவானது யார் எங்கே இருந்து வந்தது? யார் மூலம் விநியோகம் செய்யப்பட்டது? என்கிற கோணத்தில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாககாவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தேடுதலின் போது பிடிபட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மேலும் சில முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை கைது செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
போதைப் பொருட்கள் போன்ற சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது என்றும் இவ்வாறான கண்காணிப்பில், சட்ட விரோத செயல்கள் கண்டறியப்பட்டால் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய தவறுகளில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு ஏதேனும் இருப்பின் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக காவல் துறைக்கு தகவல்கள் தந்து சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.