கோவையில் 'பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தின் புது குதிரையேற்ற அணியின் அறிமுக விழா ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவையில் நடைபெறவுள்ள குதிரையேற்ற விளையாட்டு போட்டிகளான 'போலோ ப்ரிமியர் லீக்' மற்றும் 'எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' நிகழ்வுகளில் பங்கேற்க கோவையை சேர்ந்த குதிரையேற்ற விளையாட்டு நிறுவனம் 'பெகாசஸ் ஸ்போர்ட்ஸ்' தனது பிரத்யேக குதிரையேற்ற அணியை அறிமுகம் செய்தது.
கோவையில் நடைபெறும், 2 லீக் நிகழ்வுகளில் குதிரையேற்ற விளையாட்டுகளான போலோ, ஷோ ஜம்பிங் போட்டிகளில் கலந்துகொள்ள 'பெகாசஸ் கேரளா' எனும் அணி இந்த நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. போலோ ப்ரிமியர் லீக்' மற்றும் 'எக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக்' போட்டிகள் எக்வைன் ஸ்போர்ட்ஸ் இந்தியா பெடரேஷன் அமைப்பால் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு, மும்பை, டெல்லி,கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிகளுடன் விரைவில் போட்டியிட உள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோவையில் நடக்க உள்ளது. அதில், முதலாவதாக ஷோ ஜம்பிங் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தவும், போலோ போட்டிகள் ஜூலை மாதத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெகாசஸ் கேரளா அணியின் வீரர்கள் இந்த 2 பிரிவுகளிலும் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் சாந்தனு, சின்னதிரை பிரபலம் கீர்த்தி சாந்தனு, ஐ.ஹெச்.எஸ். தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சக்திபாலாஜி, எக்ஸ்போ வான்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மஹேந்திரன் மற்றும் ஒலிம்பிக் குதிரையேற்ற வீரர் இம்தியாஸ் அனீஸ் கலந்து கொண்டனர்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், பி அண்ட் எஸ் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரியங்கா சுந்தர் இந்த அணியினை அறிமுகம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை