/tamil-ie/media/media_files/uploads/2023/07/coimbatore-I.jpg)
கோவையில் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி; இருவர் கைது
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாலை சுற்றுச்சுவர் கட்டுமான பணியின் பொழுது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும், இதில் படுகாயம் அடைந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.
சுற்றுச்சுவர் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ராப்பாக்க கண்ணையா, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ் கோஸ், பரூன் கோஸ் ஆகிய 5 பேர் உயிரிழந்தவர்கள்.
இது குறித்து சம்பவ இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி மேயர் துணை மேயர், கோவை தெற்கு காவல் உதவி ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர், சைட் இன்ஜினியர் சாகுல் ஹமீது, கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன், மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் அருணாச்சலம் மற்றும் சாதிக் உல் ஆமிர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைக்கும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இருவரையும் உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து வந்து பரிசோதனை முடித்து அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கோவையில் தனியார் கல்லூரி விடுதியின் பின்புறம் சுற்றுசுவர் இடிந்து விழுந்து வெளி மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகிய நிலையில் , உயிரிழந்த 5 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. புதன்கிழமை மாலை அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூர் விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து விமான மூலம் ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட நிர்வாகம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இறந்த நபர்களின் குடும்பத்தாருக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் ,காப்பீடு நிறுவனம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றின் வாயிலாக உரிய நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.