கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி மலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த கார் ஒன்று, மலையின் மேல்பகுதியில் நிறுத்தும் போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்தனர்.
சூலூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மகள் ஸ்ரீ நிவேதா (25) தனது தாயார் வாணி (48) உடன் டாடா டியாகோ காரில் செஞ்சேரி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். காரை ஸ்ரீ நிவேதா ஓட்டிச் சென்றுள்ளார். மலையின் மேல் கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஸ்ரீ நிவேதாவுக்கு தலையில் காயமும், வலது கையில் சிராய்ப்புக் காயமும் ஏற்பட்டது. முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தாயார் வாணிக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் செஞ்சேரிமலையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.