கோவை அருகே, வழிதவறி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில் ஊர்மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன.
இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான் ஒன்று வழித்தவறி திருவள்ளுவர் நகர் ஊருக்குள் வந்தது. இதற்கு 3-4 வயது இருக்கும்.
இந்நிலையில் அந்த மானை பார்த்த தெரு நாய்கள் மானை துரத்தி கடித்துள்ளன. சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தெருநாய்களை துரத்தி உள்ளனர்.
பதறிப்போன புள்ளிமான் அருகில் இருந்த ஒரு வீட்டில் வளாகத்திற்குள் சென்று பதுங்கியது.
நாய்கள் கடித்ததால் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தம் வெளியேறியது. இதையடுத்து ஊர்மக்கள் உடனடியாக மானை பிடித்து ரத்தம் வந்து கொண்டிருந்த இடத்தில் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அங்கு வந்த வனத்துறையினர் மானுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மாங்கரை சோதனைச் சாவடிக்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே அங்கு வந்த நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் விகேவி சுந்தரராஜிடம் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“