தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி மூலம் போலீசார் அவ்வப்போது ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இருப்பினும், ரசிகர்களின் கூட்டம் கலையாமல் தொடர்ந்து ஆரவாரம் செய்து கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தது. இதனால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியைக்கொண்டு தடுப்புகள் மீது தட்டி எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைக் கண்ட தொண்டர்களும், ரசிகர்களும் மேலும் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியதோடு, விமான நிலையத்தின் உள்ளே நுழையவும் முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் தொடர்ந்து கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.