கோவை அன்னுரை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) ஆனார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதை அடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சையில் இருந்தபோது அமுல்கந்த சாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார். அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இ.பி.எஸ் இரங்கல்
இந்நிலையில், தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.
அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.