கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், 'திமுக- வினர் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது' என்று கூறியுள்ளார்.
Vanathi Srinivasan BJP MLA press meet in Coimbatore Tamil News
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெற்கு தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக, கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் வைத்து திட்டத்தை துவக்கி வைத்த அவர் முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் பேசுகையில், "தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் மாதம் ஐந்து லிட்டர் தீப எண்ணை வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோவில்களை ஒருங்கிணைக்கும் தன்னார்வ குழு உருவாக்கப்பட்டுள்ளது. தொகுதியிலுள்ள 20 கோவில்களுக்கு மாதம் தோறும் தீப எண்ணை வழங்குவது உட்பட கோவில் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வது என தீர்மானித்துள்ளோம்.
கோவிலில் பூ கட்டும் பெண்களுக்கு அரசின் திட்டங்களை பெற்று தரும் பணிகளும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஊரிலும் கல்வி சாலையை போல் கோவில்களும் முக்கியம் என குறிப்பிட்டதுடன், நிறைய இடங்களில் கோவில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில் பூஜை முறைகளிலிருந்து விலகி செல்வதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் கோவில்களில் விளக்கெரியாமல் இருக்க கூடாது என்பதற்காக இப்பணியை துவங்கியுள்ளோம். வரக்கூடிய காலங்களில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும். தீப ஒளியை போல் இந்த தொகுதி மக்களின் வாழ்விலும் ஒளி உண்டாகும்." என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக மாநில தலைவர் நேற்று வெளியிட்ட ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாக உள்ளது எனவும் தமிழக அரசியலில் விவாதத்தை மாநில தலைவர் வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார். திமுக- வினர் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது எனவும் கூறினார்.
தொடர்ந்து அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் தொடர்பான கேள்விக்கு, பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா? எனவும் பில் கேட்டீர்கள்.. பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil