/indian-express-tamil/media/media_files/2025/10/13/coimbatore-2025-10-13-18-38-42.jpeg)
Coimbatore
கோவை | அக்டோபர் 13, 2025
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை புலியகுளம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான "தாய்மை" என்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
திராவிட மாடல் ஒரு 'பெண்களுக்கு எதிரான மாடல்'!
"திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை என்று பேசிக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. மத்திய அரசின் பெண்கள் நலத் திட்டங்களுக்குக்கூட நிதியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது முழுவதுமாக பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்கிறது. குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பெண்களுக்குக் கொடுக்காததுதான் திராவிட மாடல்" என்று அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
கரூர் விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு விழுந்த அடி!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், "இதை நாங்கள் வரவேற்கிறோம். இது தமிழக காவல்துறை முழுவதுமாகத் தோல்வியடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு அடியைக் கொடுத்துள்ளது" என்று விமர்சித்தார்.
கரூர் சம்பவம் விபத்து அல்ல என்று கூறிய அவர், "முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிப் பேசும்போது நடந்த பல்வேறு விஷயங்கள் மாநில அரசின் மீது மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. சிபிஐ விசாரணை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும். சம்பவத்திற்குக் காரணமானவர்கள், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், அதிகாரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் மக்கள் முன்பாக நிறுத்தப்படுவார்கள்" என்றும் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கினால் நாடகம்!
திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "தேர்தல் நெருங்கும் நேரத்தில், விடுபட்ட பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப் போவதாக துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கொடுக்காமல் மக்களை ஏமாற்றுகின்ற 'டிராமா வேலையை' செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் இந்த அரசு போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்" என்றார்.
ஜாதிப் பெயரால் கோவையில் பல ஊர்களுக்குப் பெயரே இருக்காது!
ஊர் பெயர்கள், தெரு பெயர்களில் சாதி அடை அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற சமீபத்திய அறிவிப்பைக் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "கோவையில் நிறைய ஊர்களுக்குப் பெயரே இருக்காது. இனிமேல் ஊர்களுக்கு இன்சியல் போட்டுத்தான் கூப்பிட வேண்டும். இது அரைகுறை அரசு, அப்படித்தான் இருக்கும்" என்று ஏளனம் செய்தார்.
மேலும், வருகின்ற 28-ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வர உள்ளதாகவும், அவருக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான், கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.