கோவை வெள்ளலூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது பிளாக்கில் வசித்து வருபவர் இன்பரசன் (19). இன்பரசன் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் பிளம்பிங் வேலை செய்து விட்டு டீ வாங்கி வருவதற்காக டீ கடைக்கு சென்றுள்ளார் இன்பரசன். அவர் திரும்பிய போது, குடியிருப்புக்கு பின்புறம் அவரை சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த துணை கமிஷனர் தேவநாதன் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலேயே போத்தனூர் புறக்காவல் நிலையம் அமைந்திருக்கும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.