கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.
தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட பொருட்களை சுறையாடி விட்டு செல்கிறது.
இந்நிலையில் தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் நஞ்சுண்டாபுரம் ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசி, சர்க்கரையை சூறையாடியது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.
![Coimbatore](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/YSXmXa7zjZ7l7uKZC7BJ.jpeg)
![Coimbatore](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/67N9uhotIB6LRoySCcaa.jpeg)
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாள்தோறும் காட்டு யானைகள் வருகிறது, அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.
வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை, வெளியேறி விடுகிறது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் மூன்று முறை இந்த ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து பேசிய ரேஷன் கடை பணியாளர் அமுதா, நேற்று வந்த யானை கூட்டம் சர்க்கரை மற்றும் அரிசியை சூறையாடி சென்றது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த யானைகள் ஜன்னல்களையும் சேதப்படுத்தி சென்றது.
வனத்துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டு கடிதம் தருவதாகவும், அதனை அரசாங்கத்திடம் தொடர்ந்து அளித்து வந்தாலும் தற்போது வரை எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். நேற்று வந்த யானைகள் 25 கிலோ சர்க்கரை 20 கிலோ அரிசியை சேதப்படுத்தி சென்றதாகவும் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“