கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் (வயது 28) உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. விசாரணையில் வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோரை கைது செய்தனர்.
இதன் மூலம் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர், குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி 82 ஆவது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலரான முபசீரா கோவை மாநகராட்சி வரி விதிப்பு குழுவின் சேர்மனாக உள்ளார். பெரிய கடை வீதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோல் சென்னையில் 3 இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகமது இத்ரிஸ் என்பவரின் வீடு உள்பட தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி படித்த அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“