சென்னை மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் ரகளையில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டாக்கத்தி பயணம்:
பொதுவாக கல்லூரி செல்லும் மாணவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணித்தால் பேருந்தே அதிரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு பாட்டு பாடுவது, கலாய்ப்பது, ஃபோர்ட்டில் தொங்குவது என ஒரே சேட்டை தான்.
சில நேரம் போலீஸார் இதை கண்டிப்பார்கள், சில நேரம் மாணவர்கல் பருவம் அப்படித்தான் என்று அட்வைஸ் உடன் அனுப்பி விடுவார்கள். இவை அனைத்துமே அத்துமீறாத வரையில் பிரச்சனை இல்லை. ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டால் கண்டிப்பாக பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
நேற்றைய தினம் சென்னையில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (30.8.18) காலை 5 பேர்க் கொண்ட மாணவர்கள் 57F பஸ்ஸில் கல்லூரி செல்ல ஏறினர். பேருந்து புறப்பட தொடங்கியதும் பின்பக்க படிக்கட்டுகளில் இருந்தபடி பட்டாக்கத்திகளை தரையில் தேய்த்தவாறு சென்றனர்.
இந்த சத்தத்தை சாலையில் சென்ற மக்கள் திரும்பி பார்க்கும்போது, மாணவர்கள் கையில் பட்டாக்கத்திகள். இப்படி கத்தியை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டே வந்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
பஸ்சில் பயணித்த பொதுமக்கள் மாணவர்களின் செயலைக் கண்டு பயந்தப்படியே பயணித்துள்ளனர். சென்னையில் பதை பதைத்த இந்த சம்பவத்தில் பட்டாகத்தியுடன் பயணித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது ஒருபக்கம் என்றால், இன்று (31.8.18) சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி படித்து வரும் மாணவர்கள் 4 பேர் கஞ்சா பழகத்திற்கு அடிமையாகி இருப்பதை பேராசிரியர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
கல்லூரியின் கழிப்பறையில் மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதை பார்த்த கல்லூரி முதல்வர் உடனடியாக மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். பின்பு, மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை கொடுத்து அவர்களை கல்லூரி விட்டு வெளியேற்றினார்.
படிக்கும் வயதில் இதுப்போன்ற குற்றச்செயலில் மாணவர்கள் ஈடுபடும் செயல் பெற்றோர் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த சமூகத்தையே பாதிக்கும் என்பதை இந்த மாணவர்கள் அறிய மறுப்பதே இதுப்போன்ற செயலுக்கு காரணம்.