பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி தங்கமணி, மகன் சரவணன், மகள் வித்யா (22) உடன் வசித்து வந்தார். இவரது மகள் கோவை அரசு கல்லூரியில் பயின்று வந்தார். அதேநேரம், திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த நபரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், பெற்றோர் தரப்பில் இருந்து காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்த 30-ம் தேதிவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ தலையில் விழுந்ததில் உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் தண்டபாணி குடும்பத்தினர் வித்யா உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே வைத்து உடற்கூராய்வு செய்தனர். இதில் வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடற்கூராய்வு முடிந்தவுடன் சுடுகாட்டுக்கு வெளியே இருந்த வித்யாவின் தந்தை தண்டபாணி, இறந்த மாணவியின் அண்ணன் சரவணன் ஆகிய இருவரையும் விசாரணைக்காக கவனயக்கன்பாளையம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், முழுமையான உடற்கூறாய்வு முடிவுகள் வெளியான பின்னர் தான் உறுதியான தகவல் தெரியவரும் எனவும் தற்போது அடையாளம் காணப்பட்ட காயம் பீரோ விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது தாக்கி கொலை செய்யப்பட்டாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவி வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது காதலனும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் அடிப்படையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்ததால் அண்ணனே தங்கையை ஆணவக்கொலை செய்தது அம்பலமானது. திருப்பூரை கதிகலங்க வைத்துள்ள இந்த சம்பவத்தில், மாணவியின் தந்தை, அவரது அண்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.