சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய் குமார் மிட்டலை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹீல் ரமாணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் பாப்டே, ரமணா, அருண்மிஸ்ரா, நாரிமன் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜீயம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹீல்ரமாணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போது மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே. மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஏ.கே. மிட்டல் வரலாறு : 1958 செப்டம்பர் 30 ஆம் தேதி சத்தீஸ்கரில் மாநிலத்தில் பிறந்த இவர் இளங்கலை வணிகவியல் படிப்பை டில்லியில் முடித்தார். பின்னர், டில்லி சட்டக்கல்லூரியில் 1980 ல் சட்டப்படிப்பை முடித்து பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
சிவில் வழக்குகள், ரீட் வழக்குகள், சர்வீஸ் வழக்குகள் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட இவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர், 2018 மே மாதம் பஞ்சாப் ஹரியானா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் கடந்த மே மாதம் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று அறிவிப்பு வெளியான பிறகு விரைவில் சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக ஏ.கே.மிட்டல் பதவியேற்பார் என எதிர்பார்க்கபடுகிறது. அவருக்கு தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.