எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயலாளர் தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக வழக்கு பதிய கோரிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இது தொடர்பாக சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த ராமசந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருந்தேன். அப்போது என்னிடம் பேசிய தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர், தீபா தற்போது கடன் சுனையில் சிக்கி தவிப்பதாகவும், கடனை திருப்பி செலுத்தவும், தி.நகர் வீட்டை புதுப்பிக்கவும் பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனை அருகே எனது காரில் இருந்த 50 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தேன்.
அதன் பிறகும் கார் ஓட்டுநர் ராஜா திபாவின் குடும்ப அபிவிருத்தி மற்றும் செலவுக்காக பணம் வேண்டும் என்றார். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேலும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதன்பிறகு அவரின் பேரவையில் பதவி வாங்கி தருவதாக கூறி என்னிடம் பல லட்சங்களை தீபா மற்றும் ராஜா ஆகியோர் பெற்றனர். கட்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சராக பதவி வாங்கி தருகின்றேன் என கூறி என்னிடம் மொத்தமாக 1 கோடியே 12 லட்சம் ரூபாயை தீபா மற்றும் அவரின் ஓட்டுநர் ராஜா ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.
நான் கடனாகவும், கட்சி பதவி, அமைச்சர் பதவி தருவதாக மோசடியாக பெற்றப் பணத்தை திரும்ப கோரிய போது என்னை, தீபாவும் அவரின் கார் ஓட்டுநர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நான் கடந்த மாதம் 11 ஆம் தேதி (11 ஜனவரி 2018) பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் மனு மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே உடனடியாக எனது புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.