அரசுப் பள்ளிகளில் இனி பணியில் சேர ஆசிரியர்களுக்கும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித்துறை இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகத் தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு அறுபது விழுக்காடும், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்களுக்கு 40 விழுக்காடும் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்பட்டு இனச்சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம் செய்யும் வழிமுறை அமலில் உள்ளது.
இந்த வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அதற்குப் பதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கான ஒரு போட்டித் தேர்வு நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு இந்தப் போட்டித் தேர்வு நடத்தப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி ஆசிரியராகத் தகுதிபெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வும், ஆசிரியர் பணி நியமனத்துக்குப் போட்டித் தேர்வும் என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும்.