New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/07/paridhabangal-2025-08-07-18-13-56.jpg)
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்: இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டியதாக குற்றச்சாட்டு
‘சொசைட்டி பாவங்கள்’ என்ற தலைப்பில் கோபி-சுதாகர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகியது. இந்த வீடியோவை குறிப்பிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார்: இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டியதாக குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. ஆணவக் கொலையைத் தூண்டிவிடும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான், கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் தங்கள் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்றது.
யூடியூப்பில் லட்சக்க்கணக்கான பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ள நிலையில், பரிதாபங்கள் சேனலுக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இரு சமூகத்தினர் இடையே பிரச்னையை உருவாக்கும் வகையில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள். அந்த வீடியோவை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மேற்கொண்டு இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடாதவறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரளித்த வழக்கறிஞர், வீடியோக்களை நீக்க வேண்டும் என்றும், 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சேனலை நடத்திவரும் கோபி மற்றும் சுதாகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் குறித்து ஆய்வு செய்த பிறகே இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அண்மையில் யூடியூப்பில் வெளியான 'சொசைட்டி பாவங்கள்' என்ற வீடியோ, நெல்லையில் நடந்த ஆணவக் கொலை (honor killing) சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வீடியோவில், சாதிவெறிக்கு எதிராக நகைச்சுவையுடன் கருத்துக்கள் கூறப்பட்டிருந்தன. இந்த வீடியோவுக்கு இணையத்தில் பலத்த ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, சாதி ஒடுக்குமுறையை விமர்சித்தது வரவேற்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன் பார்க்குமாறு நெட்டிசனன்கள் அதனைப் பிரபலப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, திருப்பதி லட்டு பற்றிய ஒரு வீடியோ சில மணிநேரங்களில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.