தி.மு.க. மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருப்பதாகவும் அதனை மறைப்பதற்காக கேலிச் சித்திரங்கள், அவதூறுகளை தி.மு.க பரப்பி வருவதாகவும், 2026 தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கீழடி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிய ராஜன் அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம் என்பது குறித்து தெளிவாக கூறி விட்டோம்.
முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக கேட்டபோது, அவரவர் விரும்பும் கடவுள்களை வணங்குவது ஜனநாயகத்தில் அவரவர் விருப்பம். அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை சிறப்பிக்க அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்துகின்றார்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.
ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் வரும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அதே சமயம், அவர் தாய்மொழி முக்கியம் என கூறி இருக்கிறார். அனைவருக்கும் தாய் மொழி என்பது மிகமிக முக்கியம். தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற பொருள்படதான் அவர் கூறி உள்ளார்.
கேலி சித்திரங்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள். திமுக மீது மக்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. அதனை மறைப்பதற்காக திமுக கேலிச்சித்திரங்கள் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதனை பிரதமர் மோடி முன்னெடுத்து வருவதற்கு வாழ்த்துகள் எனப் பதில் அளித்துச்சென்றார்.