/indian-express-tamil/media/media_files/2025/10/25/selva-vs-nayinar-2025-10-25-08-23-41.jpg)
செம்பரம்பாக்கம் நீர்திறப்பு விவகாரம்: சாதிப் பாகுபாடு - செல்வப்பெருந்தகை; சமூகநீதி கூட்டணிக்குள் சமூகநீதி இல்லை - நயினார்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை பெருநகரின் குடிநீர் ஆதாரங்களில் முக்கியமாக விளங்கும் இந்த ஏரி, 3,645 மில்லியன் கன அடி கொண்டது. அண்மையில் பெய்த கனமழையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
அக்.23 நிலவரப்படி, ஏரியின் நீர் இருப்பு 2,926 மில்லியன் கன அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அன்றைக்கு 500 கன அடி நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து, தொகுதியின் மக்கள் பிரதிநிதியான என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவரும் , ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளை கடிந்து கொண்டார். அன்றைக்கே ஏரியை ஆய்வுசெய்த அவர், பொதுப்பணித் துறை அதிகாரி தனசேகரனிடம் ‘தனக்கு ஏன் தகவல் சொல்லவில்லை?’ எனக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோவைத் தனது சமூக வலைதளப் பக்கத்திலும் அவர் பதிவிட்டார்.
"மக்கள் பிரதிநிதிக்கு ஏன் தகவல் இல்லை?"
அப்போது தண்ணீர் எவ்வளவு திறந்து விடப்பட்டுள்ளது? பராமரிப்பு பணிகள் எவ்வாறு நடந்துள்ளது? என்பது குறித்து அதிகாரிகளிடம் செல்வப் பெருந்தகை கேட்டறிந்தார். ''மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன், கடந்த ஆண்டு கூட என்னிடத்தில் சொல்லவில்லை. நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? பூசணிக்காய், தேங்காய் உடைத்து பூஜை போடுகிறீர்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து தெரியப்படுத்துவதில்லை. இவர்களெல்லாம் தண்ணீரை திறக்க கூடாது, தொடக் கூடாது என நினைக்கிறீர்களா? எப்போதுதான் இந்த சாதி வெறியில் இருந்து மீண்டு வரப்போகிறோமோ? என பொதுப் பணித்துறை அதிகாரியிடம் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதிக்க சாதி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
செல்வப்பெருந்தகைக்கு நெருக்கமான வட்டாரங்கள், நீர்வளத் துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வேண்டுமென்றே அவரைப் புறக்கணித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். "தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளரும் தலித், தலைவரும் தலித், இந்தச் சட்டமன்ற உறுப்பினரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்" என்றும் அந்த வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது.
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சமூக நீதி குறித்து தி.மு.க., பேசுகிறது. ஆனால் காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில் தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கவில்லை எனக் கூறியுள்ளார். சமூகநீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூகநீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us