/indian-express-tamil/media/media_files/izHuyYu7nBWJ1HHaE5pV.jpg)
ஜெயக்குமார் மரண வாக்குமூலத்தில் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் விளக்கம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரண வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூரைச் சேர்ந்த கே.பி.கே ஜெயக்குமார். இவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூசுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவருடைய மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலருக்கு (எஸ்.பி) மரணம் வாக்குமூலம் என தலைப்பிட்டு கே.பி.கே ஜெயக்குமார் கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் ஜெயக்குமார், தன்னுடைய வீட்டிற்கு முன்பு சிலர் நோட்டமிட்டு கொண்டு இருப்பதாகவும், அவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்கள் என நினைத்ததாகவும், ஆனால், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதற்காக அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக குறிப்பிட்டு சிலரின் பெயர்களை கூறியுள்ளார்.
ஜெயக்குமார் குறிப்பிட்ட பெயர்களில் நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், நெல்லை நாடாளுமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கே.வி தங்கபாலு ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ரூபி மனோகரன் நிறைய காரியம் செய்து தருவதாக ரூ. 70 லட்சம் வரை வாங்கியதாகவும், திரும்ப கேட்டால், செல்லப்பாண்டியன் என்பவர் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கே.வி தங்கபாலு தன்னை தேர்தல் நேரத்தில் செலவு செய்யச் சொன்னதாகவும், அதற்காக ரூ. 11 லட்சம் ரூபி மனோகரனிடம் கேட்கவே அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் அவரது பெயர் இடம்பெற்ற நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
”ஜெயக்குமாரின் மரணம் எனக்கு தனிப்பட்ட இழப்பு. நானும் ஜெயக்குமாரும் அண்ணன் தம்பி போல் பழகியவர்கள். எனக்காக தேர்தல்களில் பல வேலைகள் செய்தவர். எனக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே எந்த வரவு செலவும் நடக்கவில்லை. என் மீதான புகாரில் உண்மையில்லை. அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் உண்மைதன்மை குறித்து காவல்துறை கண்டறிய வேண்டும். வழக்கில் என்னை சிக்க வைக்க யாரோ சதி செய்வது தெரிகிறது. உண்மைக்கு புறம்பான தகவல்களை பின்புலத்திலிருந்து பரப்புகிறார்கள்,” என ரூபி மனோகரன் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.