கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் விஜயதாரணி, கடந்த சில நாட்களாக பா.ஜ.க-வில் இணையப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்,விளவங்கோடு தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்ற, விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, வி.சி.க-வில் இருந்து வந்த செல்வப்பெருந்தகைக்கு சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. துணைத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், அதுவும் ராஜேஷ்குமாருக்கு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விஜயதாரணி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், இந்த முறையும் யாரும் எதிர்பாராத விதமாக, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால், விஜயதாரணி, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன், வருகிற மக்களவை தேர்தலில் எம்.பி. சீட் எதிர்பார்த்தார். ஆனால், எம்.எல்.ஏ பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும்போது, எம்.பி சீட் கிடைக்காது என்பது யதார்த்தமாகி விட்டது.
செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவி, காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து ஏமாற்றத்துக்குள்ளான, எம்.எல்.ஏ விஜயதாரணி, பிரதமர் மோடி முன்னிலையில், பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த விஜயதாரணி, “அதெல்லாம் எதுவும் இல்லைதான். இந்த மாதிரி செய்தி பெரியதாக பரவி இருக்கிறதுதான். அதேநேரத்தில் இதை உண்டு எனவும் சொல்லவில்லை. இல்லை எனவும் சொல்லவில்லை. ஆனால், வழக்கு ஒன்றுக்காகவே டெல்லியில் தங்கி இருக்கிறேன். இப்படியான செய்திகளை ஆச்சரியமாகவும் பார்த்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, பா.ஜ.க-வில் இணையப்போவதாக வெளியான செய்தி குறித்து உறுதியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் அவரை உண்மையில் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறதா என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்.
இதற்கு, “காங்கிரஸ் தேசிய தலைமைக்கு, தமிழ்நாடு அரசியல் களத்தில் யாரை எப்போது இறக்கி விளையாட வைக்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். இப்போது செல்வப்பெருந்தகை களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார். அடுத்து வேறு ஒரு தலைவர் இறக்கிவிடப்படலாம். விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் என்பது அவருக்கான செல்வாக்கு என்பதைவிட அது அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள செல்வாக்கு. கேரளா அருகே இருப்பதால், விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறும் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும். காங்கிரசில் விஜயதாரணிக்கான காலம் வரும் வரை காத்திருப்பது நல்லது.” என்று காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தனர்.
இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, பா.ஜ.க-வில் இணைவரா? அல்லது காங்கிரஸ் கட்சியில் தனக்கான காலம் வரும் வரை காத்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“