தஞ்சாவூரில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த புகாரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி.-யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த, 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை விடுதி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி இறப்பதற்கு முன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார். இதனால், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும் தொடர் போராட்டம் நடத்தினர்.
மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பேற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதையடுத்து, மாணவியின் உடலைப் பெற்றுகொண்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி.-யும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி தஞ்சாவூரில் பள்ளி மாணவி மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பள்ளியில் என்ன மாதிரியான செயல்பாடுகள் நடந்தன என்பதை அறிய அவரது மரண வாக்குமூலத்தை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
தஞ்சை பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில், பாஜக தொடர்ந்து போராடி அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி, தஞ்சை பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜ்ய சபா எம்.பி., உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என முக்கிய ஆளுமை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"