கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி-யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமாருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வசந்தகுமார் எம்.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. வசந்தகுமார் எம்.பி உடல்நிலை குறித்து, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான சஞ்சய் தத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவருமான வசந்தகுமார் மகன் விஜய் வசந்திடம் பேசினேன். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார். அவர் இதிலிருந்து விரைவாக குணமடைந்து மீண்டு வந்து நிற்க வேண்டும் அதற்காக அவருக்கு வலிமையைக் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 78. காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு நாளை காலை 8 மணிக்கு தலைவர்கள், பொதுமக்கள் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"