கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு 70.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் வசந்தகுமார் சிகிச்சை பெற்றுவந்தார்.
வெண்டிலேட்டரில் உயிர் காக்கும் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை பிற்பகல், அவருடைய உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறும்.
பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வசந்தகுமார் 2 முறை எம்.எல்.ஏ-வாகவும் 1 முறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர். வசந்தகுமாருக்கு விஜய் வசந்த், வினோத்குமார் என 2 மகன்களும் தங்கமலர் 1 மகளும் உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, எம்.பி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு சனிக்கிழமை காலை 8 மணிக்கு தலைவர்கள், பொதுமக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.