மக்களின் மனதில் இருப்பதை நேரடியாக எடுத்துச் சொல்லும் மனசாட்சியாக ஊடகங்கள் இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் பேசினார்.
தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “அனைவருக்கும் வணக்கம், விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, ’’பிரிட்டிஷ் ஆட்சியில் பல பத்திரிகைகள் வெளிவந்து நாட்டின் சுதந்திரத்திற்கு காரணமாக இருந்தன. பிராந்திய மொழி பத்திரிகைகளை பார்த்து ஆங்கிலேயர்கள் அச்சம் கொண்டனர். சமூகத்தின் மனநிலையை சரியாக எடுத்துக் காட்டுபவை ஊடகங்களே. ஊடகங்கள் நம்பகத்தன்மையை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்பம் ஊடகத்தில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. ஊடகங்களின் கவனம் அரசை சுற்றியே உள்ளது. அதே கவனம் 125 கோடி மக்களை சுற்றியும் இருக்க வேண்டும்
கருத்து சுதந்திரத்தை பத்திரிகைகள் தவறாக பயன்படுத்துவது குற்றமாகும். மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைகோடி வரை கொண்டு செல்கிறது "தினத்தந்தி"75 ஆண்டுகால சாதனையை நிகழ்த்திக் காட்டிய தினத்தந்தி நிர்வாகம், ஊழியர்களுக்கு பாராட்டு.
எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம். அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்பட்ட தந்தி கொடுக்கும் முறை காணாமல் போனது. ஆனால் 75ஆண்டுகளை கடந்து செய்திகளை தந்தியாக தினத்தந்தி கொடுத்து வருகிறது. தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவருவது மாபெரும் சாதனை. பெங்களூர், மும்பை என வெளி நகரங்களிலும் வெளியாகி சிறந்து விளங்குகிறது தினத்தந்தி. தினத்தந்தியின் வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 24மணி நேரமும் செய்தி தொலைக்காட்சிகள் மக்களுக்கு கிடைத்து வருகிறது ஆனாலும் காலையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை.
வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்றார், பிரதமர் மோடி.
அதன்பின்னர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தமிழறிஞர் விருதை ஈரோடு தமிழன்பனுக்கு மோடி வழங்கினார். சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு ‘இலக்கியத்தின் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கு வழங்கப்பட்டது. தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.பி. குழும தலைவர் செவாலியர் வி.ஜி.சந்தோசத்துக்கு சாதனையாளர் விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி பாராட்டினார்.