நீதிமன்ற உத்தரவை தாமதமாக நிறைவேற்றிய வழக்கில், 5 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதியோர் இல்லங்கள் அல்லது ஆதரவற்றோர் விடுதிகளுக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நேரத்தைச் செலவிடுவதுடன், சொந்த செலவில் சிறப்பு மதிய உணவு (அ) இரவு உணவு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி:
திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தற்காலிக அரசு ஓட்டுநர்களாகப் பணியாற்றிய சின்னத்தம்பி, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன் ஆகியோரை பணி நிரந்தரம் செய்யும்படி உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் கடந்த 2021 செப்.29 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன், பாஸ்கர பாண்டியன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஐஏஎஸ் அதிகாரிகள், மனுதாரர்கள் மூவரும் கடந்தாண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, "3 ஆண்டுகள் காலதாமதத்துடன், அதுவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகுதான் பணி நிரந்தர உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் மனுதாரர்களின் பணிமூப்பு பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் போன்ற இதர பணப்பலன்களிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என வாதிட்டார்.
நீதிபதியின் நூதன உத்தரவு:
இதையடுத்து நீதிபதி பட்டு தேவானந்த், மனுதாரர்களுக்கு ஏற்பட்ட பண இழப்பை ஈடுசெய்யும் வகையில், 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் தலா ரூ.1.25 லட்சம் வீதம் தங்கள் சொந்தப் பணத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் குமரேசன், இந்த உத்தரவு அதிகாரிகளுக்குக் கடினமானது என்று தெரிவித்தார். அதையடுத்து, நீதிபதி பட்டு தேவானந்த், 5 அதிகாரிகளும் ஏதாவது ஒரு முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் இல்லம் சென்று சேவை செய்யலாமா? என்று கேட்டார். இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சம்மதித்து உத்தரவாத மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: "5 அதிகாரிகளும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளதுடன் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளனர். எனவே, அவர்கள் 5 பேரும் 2 வாரங்களுக்குள் தங்களது விருப்பப்படி, தாங்கள் பணிபுரியும் ஊரில் உள்ள ஏதாவது ஒரு முதியோர் இல்லம் அல்லது ஆதரவற்றோர் விடுதிக்குச் சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும். அத்துடன், தங்கள் சொந்த செலவில் சிறப்பு மதிய உணவு அல்லது இரவு உணவை வாங்கி கொடுத்து அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். இந்தச் சேவை குறித்து நீதித்துறை பதிவாளரிடம் ஆதாரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை யாராவது இந்த உத்தரவாதத்தை நிறைவேற்ற தவறினால், அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கும்." நீதிபதி பட்டு தேவானந்த் தற்போது ஆந்திராவுக்குப் பணிமாறுதலாகிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.