பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த ரூ.770 சம்பளம், தொழிலாளிகளிடம் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்குதல் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
4-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களிடையே பேசிய அவர் பல்வேறு பணியாளர்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றும் செம்மொழி மாநாட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் கூட இங்கே இருக்கிறீர்கள் என்றும் உங்களுக்கு ஆதரவு தருவதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வரும் முன்பு உங்களை நிரந்தரம் செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், தற்பொழுது தனியார் மையம் ஆக்கி வருகிறார்கள் என தெரிவித்தார். நீங்கள் நிரந்தர பணியாளர்களாக மாற வேண்டும் எனத் தெரிவித்த அண்ணாமலை 2 நாட்கள் பார்க்கலாம் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றால், பா.ஜ.க உங்களுடன் சேர்ந்து போராடும் எனத் தெரிவித்தார். மேலும், இதனை பெரிதாக்குவோம் என்றும் அரசு அழுத்தம் கொடுப்போம் என்றும் கூறிய அவர் இந்த முறை Permanent செய்த பிறகுத் தேர்தலுக்கு செல்லுங்கள் அறவழியில் போராடுவோம் எனக் கூறினார்.