இமயமலையில் இருந்து சென்னைக்கு திரும்பிய ரஜினி நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, மீதமுள்ள 16 மாவட்ட நிர்வாகிகளையும் தேர்வு செய்த முடித்த பிறகு அரசியலின் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று தென்சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் ரசிகர்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகப் பேசினார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ரஜினி தனது அரசியல் பயணம் குறித்து தமிழகம் முழுவதும் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்தார்.
அதன் முடிவாக அதே மாதம் 31ம் தேதி தான் அரசியலில் நுழைவது உறுதி என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தனது மன்றத்தினரிடம் அவ்வப்போது பேசி வருகிறார். இன்று காலை 11.30 மணியளவில் ரசிகர்களுடன் பேசினார். ரசிகர்களுடன் உரையாடிய அவர், தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு ஆண்டவன் அளித்த வாய்ப்பு இது என்றும்; தூய இதயம் மற்றும் எண்ணங்கள் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
பின்னர், தலைமை பதவி கிடைக்காதவர்கள் கோபம் பொறாமை எதுவும் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று மன்றத்தின் நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். மக்கள் நலனை மட்டுமே யோசித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று வலியுறுத்தினார்.
இறுதியாக, “அனைவரும் ‘ஒத்துழைப்பு, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு’, இவை மூன்றுடன் செயல்பட்டால் ஆண்டவன் நம்மோடு இருக்கிறான், நான் உங்களுடன் இருக்கிறேன்.” என்று உரையை முடித்தார்.