கொரோனா பெருந்தொற்று 2020-21 ஆகிய ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை சிரமத்திற்கு உள்ளாகியது. அதன் பிறகு தற்போது மீண்டும் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் - பிஎப் 7 வகை சீனாவில் உள்ள மக்களின் பாதிப்பை கட்டுப்படுத்தாமல் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பயணித்து வரும் மக்களுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், சீனா, சிங்கப்பூர், ஹாங்ஹாங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணித்து வரும் பயணிகளிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இதைபற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, "கொரோனா வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது சீனா மட்டும் இன்றி தைவான், ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் பரவியிருக்கிறது. சீனாவில் மட்டுமே உயிரிழப்பு உள்ளது. பிற நாடுகளில் உயிரிழப்பு இல்லை என்று தெரிகிறது. இருந்தாலும் சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. கொரோனாவின் வீரியம் அதிகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்நிலையில் நேற்று 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது ஆனால் இதுவரைகொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil