சென்னையில் சமீபகாலமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னையில், ஆகஸ்ட் 13ம் தேதிப்படி 26 கட்டுப்பாட்டு மண்டலங்களே இருந்த நிலையில், அது தற்போது 45 ஆக அதிகரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஆகஸ்ட் 29ம் தேதி நிலவரப்படி, அண்ணாநகரில் 12, கோடம்பாக்கத்தில் 8, வளசரவாக்கத்தில் 11, அடையாரில் 10, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரில் 3, ஆலந்தூரில் 1 என்ற அளவில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன.
அண்ணாநகர், வளரசவாக்கம் மற்றும் அடையார் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், இப்பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் 3 வாரங்களுக்கும் மேலாக புதிதாக தொற்று எதுவும் கண்டறியப்படாத நிலையில், அந்த மண்டலத்தில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 13ம் தேதி நிலவரப்படி, அம்பத்தூர் மண்டலத்தில் 6 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தநிலையில், அங்கு தற்போது கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத மண்டலமாக அம்பத்தூர் மாறியுள்ளது. அம்பத்தூர் செல்லும் பகுதிகள் அனைத்தும் தடுப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது, எல்லா வகையான வாகன இயக்கங்களுக்கும் போலீசார் தடைவிதித்துள்ளனர். அம்பத்தூர் பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே வர அனுமதிக்கப்படாமல், அதற்கென்று தனியாக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil