சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சிலநாட்களாக தினந்தோறும் சராசரியாக 1,500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 7 மாநகராட்சி மண்டலங்கள், கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ராயபுரம் அதிக பாதிப்பு உள்ள மண்டலமாகவும், இதனைத்தொடர்ந்து, திருவொற்றியூர், மணலி, மாதரவம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையார் பகுதிகள் உள்ளன.
ஜூன் 15ம் நிலவரப்படி, இந்த 15 மண்டலங்களில் மொத்தம் 369 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தன. இவற்றில் ராயபுரத்தில் மடட்டும் அதிகபட்சமாக 78 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தன. தற்போது அது 61 ஆக குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளாலும், தற்போது அமல்படுத்தியுள்ள புதிய வழிமுறைகளின் பலனாகவும், பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒரு தெருவில், குறைந்தது 5 பாதிப்பு கொண்ட நபர்கள் இருப்பின் அது கட்டுப்பாட்டு பகுதியாக வரையறுக்கப்படும். கடந்த 14 நாட்களாக புதிய பாதிப்பு இல்லாமல் இருந்தால், அந்த பகுதி, கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து நீக்கப்படும். முன்னதாக, இந்த காலஅளவு 28 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளால், வார்டுகள் அளவில், தொற்று பாதிப்பை கண்டறிய உதவுகிறது. தடைகள் போடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போரை வெளியே வர வேண்டாம் என்று மருத்துவ பணியாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு, வீடு வீடாக , வார்டு வாரியாக காய்ச்சல் சோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அறிகுறி உள்ளவர்கள், வயதானவர்கள், நோய்த்தொற்று அபாயம் உள்ளவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு கொவிட் கேர் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
காய்ச்சல் சோதனை நடவடிக்கைககளுக்காக,மாநகராட்சி நிர்வாகம், பள்ளி ஆசிரியர்களை நியமித்துள்ளது. தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் நபர்கள் மீது இவர்கள் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்தபகுதியில் அதிகளவிலான பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகளின் சீரிய நடவடிக்கைகளால், பல்வேறு பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளின் பட்டியலிலிந்து நீக்கப்பட்டு வருகின்றன. திரு.வி.க. நகரில் 8 கட்டுப்பாட்டு பகுதிகள், அம்பத்தூரில் 2, தேனாம்பேட்டையில் 3, பெருங்குடியில் 2 மற்றும் சோழிங்கநல்லூரில் 4 கட்டுப்பாட்டு பகுதிகளே உள்ளன.
தண்டையார்பேட்டை பகுதி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகுந்த சவால்மிகுந்த பகுதியாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் 24 என்ற அளவில் இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள், மாநகராட்சியின் துரித நடவடிக்கைகளால் தற்போது 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரித்து மண்டலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாகவே, நம்மால் இத்தகைய முன்னேற்றம் அடைய முடிந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.