மக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் , மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர்களை மனதளவில் ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, 100 டாக்டர்கள் இணைந்து ஒரே சமயத்தில் நடனம் ஆடும் வீடியோ, மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும்நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில், பல்லாயிரக்கணக்கான மருத்துவத்துறை, முதன்மைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மனதளவில் சோர்ந்துள்ள அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், சென்னை, வேலூர் பகுதிகளை சேர்ந்த 100 டாக்டர்கள் ஒன்றிணைந்து ஒரேநேரத்தில் நடனம் ஆடி அதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர்.
Tamil Nadu doctors beat COVID-19 Blues என்ற தலைப்பிலான இந்த வீடியோவில், டாக்டர்கள், Be the Hope என்பதை அடிப்படையாக கொண்டு கை, கால்களை அசைத்து நடனம் ஆடுதல், நண்பன் படத்தில் இடம்பெற்ற ஆல் இஸ் வெல், டோண்ட் ஒரி பீ ஹேப்பி போன்ற பாடல்களை பாடிக்கொண்டே ஆடியுள்ளனர். இதுமட்டுமல்லாது பல மேஷ்அப்களையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், தற்போது மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக ரேலா மருத்துவ மையத்தின் அவசரகால சிகிச்சை துறையின் தலைவர் சாய் சுரேந்தர் தெரிவித்துள்ளார்.
சாய் சுரேந்தர், அதே மருத்துவமனையின் கதிரியக்கத்துறை தலைவர் டாக்டர் தீபா உடனும், கிளாஞ்சல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர் மீனா உள்ளிட்ட சென்னை மற்றும் வேலூரின் முன்னணி மருத்துவமனையின் டாக்டர்கள் இணைந்து இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர்.
இசையின் மூலமே மக்களிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி, நம்பிக்கையை உருவாக்க முடியும் என்பதனடிப்படையிலேயே இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Be The Hope யூடியூப் சேனலில் இந்த வீடியோவை, கடந்த சனிக்கிழமை பதிவேற்றினோம். தற்போது வரை 20 ஆயிரம் முறை, இந்த வீடியோவை மக்கள் பார்த்துள்ளனர்.
தங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, Be The Hope என்ற பெயரிலேயே பேஸ்புக் பக்கத்தை துவக்கி அதில் பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்களை வைத்து உரையாடி மக்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க இருப்பதாக டாக்டர் தீபாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
சாவிடைசரை கொண்டு அவ்வப்போது கைகளை கழுவுவது, முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கொரோனா காலத்தில் மட்டுமல்லாது நாம் எப்போதும் பின்பற்றி வந்தால், தொற்றுநோய்களிலிருந்து நம்மை நிரந்தரமாக காத்திடலாம் என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.