ஊரடங்கு காரணமாக காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விளைநிலங்களிலேயே அவற்றை அழிக்கும் விவசாயிகள், எதிர்காலத்தில் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர் எனத் தெரிவித்துள்ளார். விளைபொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ேஹமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், விளை பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து முதல்வர் அறிவித்துள்ளதாகவும், இந்த குழு அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த தொலைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயனடைந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ந்து விடலாம்… பிற துறைகள் வீழ்ந்து விடலாம்… ஆனால், வேளாண் துறையை வீழ அனுமதிக்க முடியாது எனவும், தற்போது தான் நாம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.