தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 49 பேர் உயிரிழந்தைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு என்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவில் இன்று 49 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 49 பேரில் 14 பேர் தனியார் மருத்துவமனையிலும் 35 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று கொரோனா பாதிப்பால் 39 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 76 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 65 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 47 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டு வந்தாலும் மற்றொரு புறம் கொரோனா தொற்றில் இருந்து கணிசமானோர் குணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1,438 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,782 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் சதவீதம் 55.77% என்று சுகாதாரத்துறை அறிவிப்பில் தெரியவந்துள்ளது.
பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,706 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.